தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் கடைசி நாளான இன்று (02) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்த அவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை 0.04 செக்கன்களால் தவறவிட்டார்.
எவ்வாறாயினும், நேற்று (01) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.48 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்;ன, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதன்மூலம் தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 2 தங்கப் பதக்கங்களை அவர் சுவீகரித்தார்.
இதனிடையே, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே, 52.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- சைனீஸ் தாய்ப்பே மெய்வல்லுனரில் களமிறங்கும் 5 இலங்கையர்கள்
- ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- ஜேர்மனியின் அன்ஹால்ட் மெய்வல்லுனரில் முதலிடம் பிடித்தார் யுபுன்
இதேவேளை, ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன 5ஆம் இடத்தைப் பெற்றார். எனினும், நேற்று (01) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.82 செக்கன்களில் நிறைவு செய்து அவர் தங்கப்; பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் 3 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<