இந்திய மெய்வல்லுனர் சங்கத்தினால் கிடைக்கப்பெற்ற அழைப்பிற்கு அமைய பஞ்சாப் மாநிலம், படியலா நகரில் இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர்களைப் பங்குபெறச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 16 வீரர்களைக் கொண்ட இந்தக் குழாத்தில் பெண்களுக்கான 4x100 இலங்கை அணியும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளது.
எனவே படியலாவில் நடைபெறவுள்ள இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான அஞ்சலோட்டத்தை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு இதில் பங்குபற்றுவதற்கான அழைப்பு கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கஸகஸ்தான் மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையர் ஐவர்
எதுஎவ்வாறாயினும், 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
இதனிடையே, கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இழந்த நட்சத்திர வீரர் ஹிமாஷ ஏஷானும் இந்தியா செல்வதற்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ள சில வீரர்களை இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் இணைத்துக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நிமாலி லியனாஆரச்சி (800 மீட்டர்), நதீஷா ராமநாயக்க (400 மீட்டர்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), உஷான் திவங்க (உயரம் பாய்தல்) மற்றும் காலிங்க குமாரகே (400 மீட்டர்) உள்ளிட்ட வீரர்கள் கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய பிறகு நேரடியாக இந்தியாவை வந்தடையவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.
டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்
அதேபோல, இத்தாலியில் தற்போது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற 100 மீற்றர் தேசிய சம்பியன் யுபுன் அபேகோனும் இந்த குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும், அவரது வருகை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் முகாமையாளராக லால் சந்திரகுமாரவும், பயிற்சியாளராக இலங்கை தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் வை.கே குலரத்னவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு இலங்கை மெய்வல்லுனர் பங்குகொள்கின்ற இரண்டாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடர் இதுவாகும்.
இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி விபரம்:
ஆண்கள்: யுபுன் அபேகோன், ஹிமாஷ ஏஷான் (100 மீட்டர்), காலிங்க குமாரகே, அருண தர்ஷன (400 மீட்டர்), உஷான் திவங்க (உயரம் பாய்தல்), சுமேத ரணசிங்க, வருண லக்ஷான் (ஈட்டி எறிதல்)
பெண்கள்: நதீஷா ராமநாயக்க (400 மீட்டர்), நிமாலி லியனாஆரச்சி (800 மீட்டர்), நிலானி ரத்னாயக்க (3000 மீற்றர் தடைதாண்டல்), நதீகா லக்மாலி (ஈட்டி எறிதல்), மற்றும் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்ட அணி (அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சன், சபியா யாமிக், இரேஷா மேதானி ஜயமான்ன, லக்ஷானி சுகன்திகா)
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…