ரோஹித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்

Indian Premier League 2021

167
IPLT20.COM

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு, அவரது போட்டிக்கட்டணத்திலிருந்து 12 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய தினம் (20) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ரோஹித் சர்மா, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பந்து ஓவர்களை வீசத்தவறிய குற்றச்சாட்டுக்காக அபராதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

ரோஹித் சர்மா தன்னுடைய போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதத்தை (12 இலட்சம்) அபராத தொகையாக வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், இந்தப்போட்டியின் பாதியில் ரோஹித் சர்மா மைதானத்திலிருந்து வெளியேறிய நிலையில், கீரன் பொல்லார்ட் அணித்தலைவராக செயற்பட்டிருந்தார்.

ஐ.பி.எல். விதிமுறையின் படி, முதல் முறையாக இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்கும் போது, அணித்தலைவருக்கு 12 இலட்சம் அபராதமாக விதிக்கப்படும். இரண்டாவது முறையும் இதே தவறு விடப்படும் நிலையில், அணித்தலைவருக்கு 24 இலட்சமும், வீரர்களுக்கு 6  இலட்சமும் அபராதாமாக விதிக்கப்படும். ஒரே பருவகாலத்தில் மூன்றாவது முறையாக இந்த தவறு விடப்படுமானால், அணித்தலைவருக்கு 30 இலட்சமும், வீரர்களுக்கு 12 இலட்சமும் அபராத தொகையாக நிர்ணயிக்கப்படும்.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க