ஏப்ரல் மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரர் விருதுக்காக பாகிஸ்தானின் பாபர் அசாம், பகர் ஸமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், T20 தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் இந்த விருதுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ICC வெளியிட்டது.
>> கோஹ்லியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்
இதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், T20 தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்ட பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் மற்றும் பகர் ஸமான் ஆகிய இருவரும் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் பாபர் அசாம் 94 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அத்துடன், T20 தொடரின் 3ஆவது போட்டியிலும் 59 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதனிடையே, கடந்த மாதம் ICC இன் ஒருநாள் தரவரிசையில் வரலாற்றில் முதல்முறையாக 865 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பாபர் அசாம் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம், சக வீரரான பகர் ஸமானும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். அதில் 2ஆவது போட்டியில் 193 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> Video – SLvBAN: Praveen, Dimuth நிகழ்த்திய அரிய சாதனைகள்..!| Sports RoundUp – Epi 160
இவர்கள் தவிர, நேபாள கிரிக்கெட் அணியின் குஷால் புர்டெலும் அந்த மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து, மலேசியா அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் அவர் 4 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 278 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான அலிசா ஹீலி, மெகன் ஸ்சட், நியூசிலாந்து வீராங்கனை லீச் காஸ்பெரெக் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
>> ICC இன் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு
எனவே, ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீர வீராங்கனைக்கான விருது வெல்பவர் யார் என்பதை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்வார்கள்.
முன்னதாக, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான ICC இன் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுகளை இந்தியாவின் ரிஷப் பாண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய வீரர்கள் தட்டிச்சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<