இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் நடைபெறும் 20 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் பாடசாலை அணிகளுக்கான கால்பந்து சம்பியன்ஷிப் – 2024 தொடர் இறுதிப் போட்டிக்கு ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஆகியவை தெரிவாகியுள்ளன.
கொழும்பு சிட்டி லீக் கால்பந்து அரங்கில் நடைபெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் முதலாவதாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையானது கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியினை எதிர் கொண்டது.
பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வடக்கிலிருந்து ஆரம்பம்
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் அலிகார் தேசிய பாடசாலையானது முதல் கோலினை அதன் தலைவர் முன்சிப் மூலம் பெற்றுக் கொண்டது. பின்னர் போட்டியின் எஞ்சிய நேரத்தில் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டத்தில் 1-0 என ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையானது வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது.
தொடரின் இரண்டாவது அரையிறுதியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியினை கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர்கொண்ட நிலையில் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்து கொண்டது. பின்னர் பெனால்டி அடிப்படையில் ஸாஹிரா வீரர்கள் 1(4)-1(2) வெற்றியினைப் பதிவு செய்து கொண்டனர்.
அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டி என்பன நாளை (27) முறையே கொழும்பு ரேஸ் கோர்ஸ் மற்றும் கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் ஏறாவூர் அலிகார் – கொழும்பு ஸாஹிராவினை எதிர்கொள்ள – மூன்றாம் இடத்திற்கான மோதலில் ஹமீட் அல் ஹுசைனி புனித ஜோசப் கல்லூரிக்கு முகம் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<