டோக்கியோவில் காலிங்க குமாரகேவிற்கு இரண்டாமிடம்

Seiko Golden Grand Prix 2024

87
Seiko Golden Grand Prix 2024

ஜப்பானின் டோக்கியோவில் இன்று (19) நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் பிரிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற முன்னணி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குகொண்;ட இப்போட்டியை நிறைவு செய்ய 45.57 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். எனினும், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டமான 45.00 செக்கன்களை இந்தப் போட்டியிலும் அவரால் எட்ட முடியாமல் போனது.

முன்னதாக கடந்த வாரம் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட காலிங்க குமாரகே ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை 45.92 செக்கன்களில் நிறைவு செய்தாலும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான உரிய அடைவு மட்டத்தை அவரால் எட்ட முடியாமல் போனது.

இதனிடையே, இன்று நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் பிரிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான மீற்றர் ஓட்டப் போட்டியை 45.21 செக்கன்களில் நிறைவு செய்த ஜப்பான் வீரர் கென்டாரோ சென்டோ முதலாம் இடத்தைப் பெற்றதுடன், அவரது நாட்டைச் சேர்ந்த சக வீரரான கெய்ட்டோ கவாபாட்டா (45.77 செக்.) 3ஆம் இடத்தைப் பெற்றார்.

இதேவேளை, நாளை (20) ஆரம்பமாகவுள்ள ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டிக்கான இலங்கை அணியில் காலிங்க குமாரகேவும் இடம்பெற்றுள்ளார்.

இதன் காரணமாக சீக்கோ கோல்டன் க்ரோன் பிரிக்ஸ் போட்டியில் பங்குபற்றிய காலிங்க குமாரகே இன்று (19) இரவு தாய்லாந்தை சென்றடைந்து, இலங்கை அஞ்சலோட்டக் அணியுடன் இணைந்கொள்ளவுள்ளார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<