கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்!

Lanka Premier League 2024

87
Lanka Premier League 2024

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இணைந்திருக்கும் புதிய அணியான கோல் மார்வல்ஸ் அணி நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பு குழாம் என்பவற்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

LPL ஏலத்துக்கு முன்னர் அணிகள் வெளிநாட்டு வீரர் ஒருவரை ஐகொன் வீரராக அணியில் இணைக்க முடியும். அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் கோல் மார்வல்ஸ் அணியின் ஐகொன் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

>>T20 உலகக் கிண்ணத்தில் சாதித்து காட்டுவோம் – வனிந்து ஹஸரங்க

அதுமாத்திரமின்றி கடந்த ஆண்டு கோல் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான டிம் செய்பர்ட் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் இலங்கை அணியைச் சேர்ந்த நான்கு வீரர்களை கோல் மார்வல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி துடுப்பாட்ட வீரர்களான பானுக ராஜபக்ஷ, லசித் குரூஸ்புள்ளே மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஜப்னா கிங்ஸ் அணிக்காக கடந்த பருவகாலங்களில் விளையாடி வந்த மஹீஷ் தீக்ஷனவையும் கோல் மார்வல்ஸ் அணி இணைத்துள்ளது.

இதேவேளை கோல் மார்வல்ஸ் அணி தங்களுடைய பயிற்றுவிப்பு குழாத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை, அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான கிரஹம் போர்ட் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், சாமர கபுகெதர உதவி பயிற்றுவிப்பாளராகவும், அண்டன் ரொக்ஸ் களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டடுள்ளார். இதனிடையே புள்ளியியல் பகுப்பாய்வாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியுடன் இணைந்து செயற்பட்ட ஏ.ஆர். ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<