இங்கிலாந்து அணியுடன் இணையும் கீய்ரோன் பொலார்ட்

375

மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் சகலதுறைவீரரான கீய்ரோன் பொலார்ட் 2024ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான இங்கிலாந்து அணி பயிற்சியாளர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கழகத்தில் இயக்குநராகும் முன்னாள் இலங்கை வீரர்

ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் குறித்த நாடுகளின் மைதான சாதக, பாதக நிலைமைகள் குறித்து அறிந்து வைத்திருக்கும் கீய்ரோன் பொலார்ட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்படவிருக்கின்றார்.

கீய்ரோன் பொலார்ட் இங்கிலாந்து அணியுடன் இணைந்த விடயமானது இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) உத்தியோகபூர்வமாக நேற்று (24) வெளியிட்ட ஊடக அறிக்கை வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கிய கீய்ரோன் பொலார்ட் அதன் பிறகு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கீய்ரோன் பொலார்ட் 2012ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் வீரராக காணப்பட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டின் ஜூன் மாதம் 04 தொடக்கம் 30ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, தொடரின் நடப்புச் சம்பியன்களாக இங்கிலாந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<