குசல், அவிஷ்கவுக்கு கொவிட்-19 தொற்று

Asia Cup 2023

337

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் இறுதியாக இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள ஓரா அணிக்காக விளையாடியிருந்தனர்.

>> சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சென்ற இலங்கை வீரர்கள்

தம்புள்ள ஓரா அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த போதும், துரதிஷ்டவசமாக பி லவ் கண்டி அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை பறிகொடுத்தது.

எனினும் தம்புள்ள ஓரா அணிக்காக விளையாடிய குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இதற்கு முன்னர் உபாதைகளை சந்தித்துவந்திருந்த நிலையில் அதிலிருந்து குணமடைந்து தேசிய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இவர்கள் இருவரில் குசல் பெரேரா மாத்திரம் ஆசியக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பிடித்திருந்ததுடன், அவிஷ்க பெர்னாண்டோவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் தற்போது இருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தாலும் ஆசியக்கிண்ணத் தொடரில் குசல் பெரேரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த காலங்களில் கொவிட்-19 தொற்றுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் விதித்திருந்த போதும், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே குசல் பெரேரா அணியில் தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கையின் முதற்கட்ட குழாத்தில் லசித் குரூஸ்புள்ளே மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் நடந்துமுடிந்த LPL தொடரில் கோல் டைட்டன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<