இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் இன்று (18) நடைபெற்றன.
நடப்புச் சம்பியனான கொழும்பு கிரிக்கெட் கழகத்தை முதலாவது அரை இறுதியில் வெற்றிகொண்டு SSC கழகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய அதேநேரம், இராணுவ கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
இன்றைய அரை இறுதிப் போட்டிகளில் SSC கழகத்தின் அவிஷ்க பெர்னாண்டோ, இராணுவ கிரிக்கெட் கழகத்தின் அஷேன் ரன்திக மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து அந்தந்த அணிகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
SSC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ அதிர அரைச் சதம் மற்றும் ப்ரபாத் ஜயசூரியவின் உள்ளிட்ட சுழல் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு ஆகியவற்றால் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் 32 ஓட்டங்களால் SSC கழகம் வெற்றியீட்டியது.
NCC மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய SSC கழகத்தின் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ எதிரணியின் பந்துவீச்சுக்களை துவம்சம் செய்து அதிரடியாக அரைச் சதமடித்தார். 48 பந்துகளுக்கு முகம்கெடுத்த அவர், 3 பவுண்ட்ரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.
உபாதை காரணமாக தற்போது நடைபெற்று வருகின்ற மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத அவிஷ்க பெர்னாண்டோ, முதல்தடவையாக இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் களமிறங்கி பிரகாசித்தார்.
இதன்படி, எஸ்எஸ்சி கழகம் 20 ஓவர்;களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.
இந்த நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம், எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.
>> 25 வருடங்களின் பின் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உலகக் கிண்ண பதக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த ரொன் சந்த்ரகுப்த மாத்திரம் 55 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
பந்துவீச்சில் எஸ்எஸ்சி கழகம் சார்பில் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும், ஜெப்ரி வெண்டர்சே, ஹிமேஷ் ராமநாயக்க மற்றும் தரிந்து ரத்னாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
SSC கழகம் – 159/4 (20) – அவிஷ்க பெர்னாண்டோ 65, நிபுன் தனன்ஞய 34, மாலிந்த புஷ்பகுமார 2ஃ33
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 127/10 (19.3) – ரொன் சந்த்ரகுப்த 55, அஷான் ப்ரியன்ஜன் 21, ப்ரபாத் ஜயசூரிய 3/16, ஜெப்ரி வெண்டர்சே 2/17, ஹிமேஷ் ராமநாயக்க 2/23, தரிந்து ரத்னாயக்க 2/29
முடிவு – SSC கழகம் 32 ஓட்டங்களால் வெற்றி
இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
NCC மைதானத்தில் நடைபெற்ற குருநாகல் இளையோர் கழகத்துடனான 2ஆவது அரை இறுதியில் 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டிய இராணுவ கிரிக்கெட் கழகம் கழகம், SSC கழகத்துடன் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணிக்காக லஹிரு ஜயரட்ன மாத்திரம் 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
>> இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் CSK
இந்த நிலையில், 115 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இராணுவ கிரிக்கெட் கழகம், ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இராணுவ கிரிக்கெட் கழகம் சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய அஷேன் ரன்திக ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும், சீக்குகே பிரசன்ன ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் எடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 114/6 (20) – லஹிரு ஜயரட்ன 34*, சமீர சந்தமால் 29, ரந்தீர ரணசிங்க 28*, ஜனித் சில்வா 3/15
இராணுவ கிரிக்கெட் கழகம் – 120/1 (11.4) – அஷேன் ரன்திக 54*, சீக்குகே பிரசன்ன 50*
முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<